மைசூர் போண்டா

மைசூர் போண்டா செய்வது எப்படி ?

வடை சாப்பிட்டு சலித்து போனவர்கள் மைசூர் போண்டா செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

உளுத்தம் பருப்பு – 1 கப்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – ஒரு சிறு துண்டு
கறிவேப்பிலை – சிறிது
கொத்துமல்லி – சிறிது
தேங்காய் (சிறு துண்டுகள்) – 2 டேபிள்ஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்றவாறு
எண்ணெய் – பொரிக்க

செய்முறை :

* உளுத்தம் பருப்பை சுமார் 2 முதல் 3 மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் அதை நன்றாகக் கழுவி, நீரை ஒட்ட வடித்து விட்டு கிரைண்டரில் போட்டு, உப்பு சேர்த்து மைய அரைக்கவும். அவ்வப்பொழுது சிறிது நீரைத் தெளித்து அரைத்தால் உளுந்து நன்றாக அரைப்பட்டு மென்மையாக இருக்கும். தண்ணீர் அதிகம் ஊற்றாமல் கட்டியாக அரைக்க வேண்டும்.

* இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிகொள்ளவும்.

* அரைத்த மாவில் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, மிளகு, சீரகம், தேங்காய் துண்டுகள் சேர்த்து நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய வைக்கவும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, மாவை எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு சிவக்க சுட்டெடுக்கவும்.

* தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.