ஆந்திரா ஸ்டைல் தக்காளி ரசம்

ஆந்திரா ஸ்டைல் தக்காளி ரசம்


ரசத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு ரசமும் வித்தியாசமான சுவையில் இருக்கும். அதில் பலருக்கு பிடித்த ரசம் தக்காளி ரசம் என்று சொல்லலாம். ஆனால் அந்த தக்காளி ரசத்தை ஆந்திரா ஸ்டைலில் செய்து சுவைத்திருக்கிறீர்களா? ஆம், ஆந்திரா ஸ்டைலில் கூட தக்காளி ரசம் உள்ளது. இந்த ரசம் காரமாக இருப்பதுடன், வித்தியாசமான சுவையிலும் இருக்கும். இங்கு அந்த ஆந்திரா ஸ்டைல் தக்காளி ரசத்தை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து இந்த குளிர்காலத்தில் செய்து சாப்பிடுங்கள். நிச்சயம் இந்த குளிர்காலத்திற்கு இது இதமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

தக்காளி - 1 (பெரியது மற்றும் நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1
புளிச்சாறு - 1 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்

அரைப்பதற்கு...

துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 3-4
பூண்டு - 6 பெரிய பற்கள்

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 1
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து 2-3 நிமிடம் பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும். பின்பு அதில் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் புளிச்சாறு சேர்த்து நன்கு கிளறி, பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, அரைத்து வைத்துள்ளதை சேர்த்து நன்கு 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து இறக்கி ரசத்தில் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி சிறிது நேரம் மூடி வைத்து, பின் பரிமாறினால் ஆந்திரா ஸ்டைல் தக்காளி ரசம் ரெடி!!!