வெள்ளை பூசணி சாம்பார்

வெள்ளை பூசணி சாம்பார்

வெள்ளை பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், உடலில் நீர்ச்சத்தை சீராக பராமரிக்கலாம். அதற்கு வெள்ளை பூசணியை சாம்பார் செய்து சாப்பிடுவது சிறந்த வழி. உங்களுக்கு வெள்ளை பூசணி கொண்டு எப்படி சாம்பார் செய்வதென்று தெரியாதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.
இங்கு வெள்ளை பூசணி சாம்பாரின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1/2 கப்
தண்ணீர் - 2 கப்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சாம்பாருக்கு...
வெள்ளை பூசணி - 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வரமிளகாய் - 2 (நீளமாக கீறியது)
வெங்காயம் - 1 (பெரியது மற்றும் நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் துவரம் பருப்பை நீரில் நன்கு கழுவி, குக்கரில் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரை திறந்து, பருப்பை மத்து கொண்டு மசித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், வரமிளகாய் சேர்த்து தாளித்து, பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பிறகு அதில் தக்காளி சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கியதும், வெள்ளை பூசணியை சேர்த்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு அதில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, பின் மசித்து வைத்துள்ள பருப்பு, புளிச்சாறு மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு பச்சை வாசனை போக 5-8 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், வெள்ளை பூசணி சாம்பார் ரெடி!!!