பக்வீட் பக்கோடா

பக்வீட் பக்கோடா

இதுவரை எத்தனையோ பக்கோடாக்களை பார்த்திருப்போம். ஆனால் பக்வீட் என்னும் தானியத்தின் மாவு கொண்டு செய்யப்படும் பக்கோடாவை சாப்பிட்டதுண்டா? இந்த பக்கோடாவானது விரதத்தின் போது செய்து சாப்பிடுவதற்கு ஏற்றது. அந்த வகையில் நீங்கள் விரதம் இருந்தால், பக்வீட் பக்கோடாவை செய்து சாப்பிடுங்கள். இங்கு அந்த பக்வீட் பக்கோடாவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து சாப்பிட்டு, சிவராத்திரி விரதத்தின் போது ஆரோக்கியமாக இருங்கள்.

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 3-4 (வேக வைத்தது)
பக்வீட் மாவு (buckwheat flour) - 1 கப்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். பின்பு ஒரு பௌலில் உருளைக்கிழங்கை போட்டு மசித்து, அதில் பக்வீட் மாவை சேர்த்து, வேண்டுமானால் தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு அந்த கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பக்வீட் பக்கோடா ரெடி!!!