கம்பு மாவு - ஃப்ரூட் பேடா

கம்பு மாவு - ஃப்ரூட் பேடா

தேவையானவை:

கம்பு மாவு, கோதுமை மாவு - தலா அரை கப், துருவிய கேரட், ஆப்பிள் - தலா அரை கப், பால் - முக்கால் கப், மில்க்மெய்டு - 4 டீஸ்பூன், நெய் - 4 டீஸ்பூன், வெண்ணெய் - 50 கிராம், சர்க்கரை - 500 கிராம், பாதாம், முந்திரி, திராட்சை, பேரீச்சை - தலா 6, குங்குமப்பூ - 3 சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

வாணலியில் நெய் விட்டு ஆப்பிள், கேரட்டை தனித்தனியே வதக்கி இரண்டையும் சேர்த்து, பால் விட்டு, வேகவிடவும். வெந்து பால் வற்றியதும் நறுக்கிய பாதாம், முந்திரி, பேரீச்சை மற்றும் திராட்சை, மில்க்மெய்டு சேர்த்துக் கிளறி, உருட்டும் பதம் வந்தவுடன் வேறு பாத்திரத்துக்கு மாற்றி ஆறவிடவும். ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து, அடுத்து வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து நீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து 30 நிமிடங்கள் அப்படியே மூடி வைக்கவும்.

வேறு ஒரு பாத்திரத்தில் சர்க்கரையில் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றவும். சர்க்கரை கரைந்து கொதி வரும்போது குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் சேர்த்து அடுப்பை குறைவான தீயில் வைத்து (கொதிக்கும்போது ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்தால் பூத்து வராமலிருக்கும்), ஒரு கம்பி பதத்தில் பாகு காய்ச்சி வைக்கவும். இதுதான் ஜீரா. பிசைந்து வைத்த மாவை சிறு உருண்டைகளாக எடுத்து பூரியாக தேய்த்து, நடுவில் ஆப்பிள் - கேரட் கலவையை வைத்து ஓரத்தில் தண்ணீர் தடவி விருப்பம் போல் மடித்து வைத்துக்கொள்ளவும். இதுதான் பேடா. வாணலியில் எண்ணெயை சூடாக்கி, மிதமான சூட்டில் இருக்கும்போது பேடாக்களைப் போட்டு பொரித்து எடுத்து ஜீராவில் போட்டு 15-20 நிமிடம் ஊறிய பின் பரிமாறவும்.

விருப்பப்பட்டால், மேலாக ஐஸ்க்ரீம் வைத்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.