சுரைக்காய் மசாலா

சுரைக்காய் மசாலா

சுரைக்காயில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. குறிப்பாக நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. அத்தகைய சுரைக்காயை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அதிலும் சுரைக்காயை மசாலா போன்று செய்து, சாதத்துடன் சாப்பிட்டால், நன்றாக இருக்கும். இங்கு அந்த சுரைக்காய் மசாலாவின் செய்முறை தான் கொடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் எளிமையான செய்முறை. பேச்சுலர்கள் கூட முயற்சிக்கலாம். சரி, அந்த ரெசிபியைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

சுரைக்காய் - 1/2 கிலோ
தயிர் - 1 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

செய்முறை:

முதலில் சுரைக்காயை தோலுரித்து, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்தமும், சீரகம் போட்டு தாளித்து, நறுக்கி வைத்துள்ள சுரைக்காயை சேர்த்து, தீயை குறைவில் வைத்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும். பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, சீரகப் பொடி, மல்லி தூள், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும். பிறகு தயிரை நன்கு அடித்து, அத்துடன் சேர்த்து கிளறி, உப்பு தூவி, 3-4 நிமிடம் கொதிக்க விட வேண்டும். அடுத்து தண்ணீர் ஊற்றி, 8-10 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். பின்பு மூடியை நீக்கிவிட்டு, சுரைக்காய் வெந்துவிட்டால், அதில் கரம் மசாலா தூவி கிளறி, இறக்கி விட வேண்டும். இப்போது அருமையான சுரைக்காய் மசாலா ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி, சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.