சத்து மாவு உருண்டை

ஆரோக்கியத்தைத் தரும் சத்து மாவு உருண்டை

சத்து மாவு நிறைய தானியங்களைக் கொண்டு செய்யப்படுவதால், இதனை அன்றாடம் உட்கொண்டு வருவது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. வேண்டுமானால் இதனை காலை வேளையில் கூட சாப்பிடலாம். அதிலும் டயட்டில் இருப்போர் இதனை காலை உணவாக உட்கொள்வது நல்லது. குறிப்பாக குழந்தைகளுக்கு அன்றாடம் கொடுப்பது மிகவும் சிறந்தது. இங்கு அந்த சத்து மாவு உருண்டையை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை அன்றாடம் செய்து சாப்பிட்டு ஆரோக்கியமாக இருங்கள்.

தேவையான பொருட்கள்:

சத்து மாவு - 1 கப்
வெல்லம்/கருப்பட்டி - 1/3 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் சத்து மாவை ஒரு வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து, 8-10 நிமிடம் நன்கு மணம் வெளிவரும் வரை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெல்லம்/கருப்பட்டியை தட்டி/துருவிக் கொண்டு, ஒரு வாணலியில் போட்டு, அதில் 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் ஊற்றி, வெல்லம் நன்கு கரைந்து, சற்று கெட்டியாக தேன் போன்ற பதத்திற்கு வரும் போது அதனை இறக்கி, குளிர வைக்க வேண்டும். பின்பு அதனை வறுத்து வைத்துள்ள சத்து மாவில் சேர்த்து, அத்துடன் ஏலக்காய் பொடியையும் சேர்த்து கிளறி விட வேண்டும். பிறகு நெய்யை சூடேற்றி, அதனையும் சத்து மாவுடன் சேர்த்து நன்கு கிளறி உருண்டைகளாகப் பிடித்தால், சத்து மாவு உருண்டை ரெடி!!!