சிறுகீரைக் கம்பு அடை

சிறுகீரைக் கம்பு அடை

தேவையானவை:
சிறுகீரை - 200 கிராம்
பச்சரிசி மாவு - 100 கிராம்
கம்பு மாவு - 300 கிராம்
முந்திரிப் பருப்பு - 50 கிராம்
நெய் - 50 கிராம்
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)
தக்காளிப் பழம் - 3
பூண்டுப்பல் - 8
கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தக்காளியை மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும், பூண்டுப்பல்லை நன்றாகத் தட்டி வைத்துக் கொள்ளவும். கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். முந்திரி, மிளகு, சீரகம் ஆகியவற்றை ஒன்றாக வறுத்து, பொடியாக்கிக் கொள்ளவும்.
கீரையை நறுக்கி கழுவி, தண்ணீரை வடிக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும், கீரையைச் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். கீரையில் இருக்கும் தண்ணீர் முழுவதுமாக சுண்டியதும், நெய் சேர்த்துக் கிளறி நன்கு வதக்கி இறக்கவும். ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவு மற்றும் கம்பு மாவைக் கொட்டி, இத்துடன் வதக்கிய கீரையைச் சேர்த்து, மெலிதாக நறுக்கிய வெங்காயம், கூழாக்கிய தக்காளி, நன்றாகத் தட்டியப் பூண்டுப்பல், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையுடன், வறுத்துப் பொடித்தவற்றை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து தளதளவென கரைத்துக் கொள்ளவும். (மாவை கெட்டியாகக் கரைத்தால் கம்பு மாவு வேகாது). இதை எண்ணெய் விட்டு அடையாக இருபுறமும் வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு:
வெங்காயம் அல்லது தக்காளித் துவையலுடன் இந்த அடையைச் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.