சைதாப்பேட்டை வடைகறி

சைதாப்பேட்டை வடைகறி

சென்னையைப் பொறுத்தவரை சைதாப்பேட்டை 'வடை கறி’ ரொம்ப ஃபேமஸ். 65 ஆண்டுகாலமாக வடைகறிக்கு புகழ்பெற்றது... சைதாப்பேட்டை 'மாரி ஹோட்டல்’. இங்கே, உங்களுக்காக 'வடை கறி' சீக்ரெட் பகிர்கிறார் கடையின் உரிமையாளர் குமரன்.ஐந்து பேருக்கு வடைகறி செய்ய...

தேவையானவை:

கடலைப்பருப்பு (அ) பட்டாணிப் பருப்பு - அரை கிலோ,
இஞ்சி - 50 கிராம்,
பச்சை மிளகாய் - 50 கிராம்,
பூண்டு - 100 கிராம்,
ஏலக்காய் - 5,
கிராம்பு - 5,
பட்டை, லவங்கம் - 25 கிராம்,
சோம்பு - 50 கிராம்,
மஞ்சள்தூள் - 10 கிராம்,
தனியாத்தூள் - 50 கிராம்,
மிளகாய்ப்பொடி - 50 கிராம்,
உப்பு - தேவையான அளவு,
பெரிய வெங்காயம் - அரை கிலோ,
புதினா - ஒரு கட்டு.

செய்முறை:

கடலைப்பருப்பு / பட்டாணி பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, வடைக்கு அரைப்பதுபோல் கெட்டியாக அரைத்துக் கொள்ளுங்கள். கனமான சட்டியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, கடலைப்பருப்பு விழுதை பக்கோடா போல பொரித்து எடுங்கள்.

பின்பு, இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள். ஏலக்காய், கிராம்பு, பட்டை, லவங்கம், சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில் பொடி செய்து, இஞ்சி - பூண்டு பேஸ்ட்டுடன் கலந்துகொள்ளுங்கள்.

கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக வதக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதே எண்ணெயில் இஞ்சி - பூண்டு விழுது, பட்டை - சோம்பு பொடி கலவையை வதக்கி, தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடுங்கள். ஒரு கொதி வந்ததும், வதக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடுங்கள்.

நன்றாக கொதித்ததும், பொரித்து வைத்துள்ள கடலைப்பருப்பு பகோடாக்களை சேர்த்து, அரை மணி நேரம் கொதிக்கவிடுங்கள். புதினா தூவி, இறக்குங்கள்.

இட்லி, தோசை, பூரி ஆகியவற்றுக்கு ஏற்ற சைட் டிஷ் இது.