ராயகோளா பிரியாணி

ராயகோளா பிரியாணி

தேவையானவை:

பாசுமதி அரிசி - 2 கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 3, பச்சை மிளகாய் - 2, இஞ்சி + பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், புதினா, மல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தயிர் - அரை கப், தேங்காய்ப்பால் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2, நெய் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன். கோளா செய்ய: புடலங்காய் (அல்லது) பீன்ஸ் (அல்லது) கோஸ் (பொடியாக நறுக்கியது) - ஒரு கப், பொட்டுக்கடலை - அரை கப், மல்லித்தழை - சிறிதளவு, எண்னெய் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
அரைக்க: சின்ன வெங்காயம் - 4, பூண்டு - 4 பல், பச்சை மிளகாய் - 1, காய்ந்த மிளகாய் - 1, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, சோம்பு - அரை டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 1.

செய்முறை:

(கோளா செய்ய) புடலங்காய் அல்லது கோஸ் என்றால் சிறிது உப்புப் போட்டுப் பிசறி, அரை மணி நேரம் வையுங்கள். பீன்ஸ் என்றால் ஒரு கொதிக்கு வேகவிட்டு எடுத்துக்கொள்ளுங்கள். நீரை ஒட்ட பிழிந்துவிட்டு, காயை எடுத்துக்கொண்டு, அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை காயுடன் சேர்த்து அரைத்தெடுங்கள். பொட்டுக்கடலையைப் பொடித்து அரைத்ததுடன் சேர்த்து, உப்பு, பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்த்துப் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள். இதுதான் கோளா உருண்டை.
பிரியாணி செய்ய: அரிசியைக் கழுவி ஊறவையுங்கள். வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்குங்கள். எண்ணெய், நெய்யைக் காயவைத்து, பட்டை, லவங்கம் தாளித்து, வெங்காயம், உப்பு, மஞ்சள்தூள் சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளி, இஞ்சி + பூண்டு விழுது, மிளகாய்தூள், பச்சை மிளகாய், புதினா, மல்லி சேர்த்து நன்கு வதக்குங்கள். அத்துடன் தயிரையும் சேர்த்து, ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு, தேங்காய்ப்பால் ஒரு கப், தண்ணீர் 2 கப் சேருங்கள். ஊறவைத்த அரிசியை, தண்ணீரை வடித்துவிட்டு, தேவையான உப்பு சேர்த்து, கிளறி மூடுங்கள். ஒரு விசில் வந்ததும், தீயைக் குறைத்து, ஐந்து நிமிடம் கழித்து இறக்குங்கள். பிரஷர் போனதும் மூடியைத் திறந்து, கோளா உருண்டைகளை சேர்த்துக் கிளறி மூடுங்கள்.