பாதாம் பால் பூரி

பாதாம் பால் பூரி

மாலை வேளையில் பசியுடன் இருக்கும் குழந்தைகளின் பசியைப் போக்க வேண்டுமெனில், பாதாம் பால் பூரியை செய்து கொடுங்கள். இந்த பாதாம் பால் பூரியானது மிகவும் ஆரோக்கியமானது.

குறிப்பாக இதில் பால், பாதாம் சேர்த்திருப்பதால், இதனை குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்களின் எலும்பு மற்றும் கற்கள் வலிமையடையும். மேலும் இதில் உள்ள பாதாம் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

எனவே அவ்வப்போது குழந்தைகளுக்கு பாதாம் பால் பூரியை செய்து கொடுங்கள். இதனை பால் போளி என்றும் சொல்வார்கள். சரி, இப்போது அந்த பாதாம் பால் பூரியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

பால் - 1 லிட்டர்
கோதுமை மாவு - 2 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
பாதாம் - 10
மஞ்சள் நிற கேசரி பவுடர் - 1 சிட்டிகை
பாதாம் எசன்ஸ் - 4 துளிகள்
குங்குமப்பூ - 2 சிட்டிகை

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை சேர்த்து, அதில் நெய், 1 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக பிசைந்து, 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, பூரிகளாக தேய்த்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள பூரிகளை போட்டு பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் பாதாமை சுடுநீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, அதில் உள்ள தோலை நீக்கிவிட்டு, பின் அதனை மிக்ஸியில் போட்டு பால் சிறிது சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் அந்த பேஸ்ட்டை சேர்த்து குறைவான தீயில் நன்கு கொதிக்க விட்டு, அத்துடன் கேசரி பவுடர் மற்றும் எசன்ஸ் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

இறுதியில் பாலானது வெதுவெதுப்பாக இருக்கும் போது, அதில் குங்குமப்பூ சேர்த்து கலந்து, பின் பூரிகளை அதனுள் சேர்த்து ஊற வைத்து பரிமாறினால், சுவையான பாதாம் பால் பூரி ரெடி!!!