நூல்கோல் குழம்பு

நூல்கோல் குழம்பு

பலருக்கும் நூல்கோலை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாது. அத்தகையவர்களுக்காக நூல்கோலைக் கொண்டு எப்படி குழம்பு செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இது சாதம் அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். சரி, இப்போது அந்த நூல்கோல் குழம்பின் எளிய செய்முறையைப் பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

நூல்கோல் - 4
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
தயிர் - 1/2 கப்

அரைப்பதற்கு...

துருவிய தேங்காய் - 1 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
வரமிளகாய் - 1

செய்முறை:

முதலில் நூல்கோலின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நூல்கோலை சேர்த்து, அத்துடன் மிளகுத் தூள், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும். அதற்கு மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். பின் தயிரை நன்கு அடித்து தனியாக வைத்துக் கொள்ளவும். நூல்கோல் நன்கு வெந்ததும், அதில் தயிர் மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறி, மிதமான தீயில் பச்சை வாசனை போக கொதிக்க விட வேண்டும். இறுதியில் ஒரு சிறு வாணலியை மற்றொரு அடுப்பில் வைத்து, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, குழம்பில் ஊற்றி கிளறி இறக்கினால், நூல்கோல் குழம்பு ரெடி!!!