ஸ்பைஸி தவா இட்லி

ஸ்பைஸி தவா இட்லி

தேவையானவை:

இட்லி - 4
பெரிய வெங்காயம் - ஒன்று ( பொடியாக நறுக்கியது)
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
பெரிய தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை குடமிளகாய் - கால் கப் (பொடியாக நறுக்கியது)
பச்சைப் பட்டாணி - அரை கப்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
பாவ் பாஜி மசாலா - ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை - அலங்கரிக்க
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இட்லியை சின்ன சதுரத் துண்டுகளாக வெட்டி வைக்கவும். இட்லி டிரையாக இருந்தால், வெந்நீரில் ஐந்து நிமிடங்கள் ஊற வைத்து தண்ணீரைப் பிழிந்தால், சாஃப்ட் ஆகி விடும். கடாயில் வெண்ணெய் இட்டு உருகியதும் சீரகத்தைப் போட்டு வெடிக்க விடவும். அடுத்து பெருங்காயம், வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். அடுத்து தக்காளியைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். அடுத்து குடமிளகாய் மற்றும் பச்சைப் பட்டாணியைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். அதன் பிறகு தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் பாவ் பாஜி மசாலா ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்கி, இறுதியாக இட்லித் துண்டுகளைச் சேர்த்து மிருதுவாக கலவை முழுவதும் இட்லியில் படுமாறு கிளறி, கொத்தமல்லித்தழைத் தூவி இறக்கிப் பரிமாறவும்.