ஆந்திரா ஸ்டைல்: பாகற்காய் குழம்பு

ஆந்திரா ஸ்டைல்: பாகற்காய் குழம்பு

பொதுவாக பாகற்காயை அதிகம் சாப்பிட்டால், உடலில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறிவிடும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். அது உண்மை தான். ஆகவே வாரத்திற்கு ஒரு முறை பாகற்காயை உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள கசப்புத் தன்மையால், உடலில் தங்கியுள்ள பூச்சிகள் அனைத்து வெளியேறி, சருமம் நன்கு பொலிவோடு காணப்படும். அதிலும் இந்த பாகற்காயை குழம்பு வைத்து சாப்பிட்டால், சுவையாக இருக்கும். அந்த வகையில் இப்போது ஆந்திரா ஸ்டைலில் எப்படி பாகற்காய் குழம்பு வைப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பாகற்காய் - 4-5 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
வரமிளகாய் - 4
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
எள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பேஸ்ட் - 2 டீஸ்பூன்
பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
தக்காளி சாறு - 1/4 கப்
நாட்டுச்சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
புளிச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் பாகற்காயை நீரில் கழுவி விட்டு, அதில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு வேண்டிய அளவில் நறுக்கிக் கொண்டு, உப்பு சேர்த்து கிளறி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை சிறிது நீர் சேர்த்து கழுவிக் கொண்டு, நீரை முற்றிலும் வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், வரமிளகாய், மல்லி, சீரகம் மற்றும் எள் சேர்த்து தீயை குறைவில் வைத்து, பொன்னிறமாக வறுத்து குளிர வைக்க வேண்டும். பின் அதனை மிக்ஸியில் போட்டு, நன்கு நைஸாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பாகற்காயை போட்டு 4-5 நிமிடம் சற்று பொன்னிறமாக வறுத்த பின், நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் சேர்த்து, 2 நிமிடம் வதக்கி, தக்காளி சாற்றை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். இறுதியில் அரைத்து வைத்திருக்கும் பொடி, நாட்டுச்சர்க்கரை, புளிச்சாறு மற்றும் உப்பு சேர்த்து, 1 கப் தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு இறக்கினால், சூப்பரான ஆந்திரா ஸ்டைல் பாகற்காய் குழம்பு ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.