சேனைக்கிழங்கு வறுவல்

சேனைக்கிழங்கு வறுவல்

பலருக்கு சேனைக்கிழங்கை குழம்பு செய்து சாப்பிட்டால் மிகவும் பிடிக்கும். ஆனால் அதே சேனைக்கிழங்கை வறுவல் போன்று செய்தால் அதன் சுவையே தனி என்பது தெரியுமா? உங்களுக்கு சேனைக்கிழங்கு வறுவலை எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியானால் தமிழ் போல்ட் ஸ்கை மிகவும் ஈஸியாக செய்யக்கூடியவாறான சேனைக்கிழங்கு வறுவலின் செய்முறையைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றை மதிய வேளையில் சமைத்து சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டுப் பாருங்கள். மிகவும் அட்டகாசமாக இருக்கும். சரி, இப்போது சேனைக்கிழங்கு வறுவலின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

சேனைக்கிழங்கு - 1/2 கப் (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 டீஸ்பூன்

வறுத்து அரைப்பதற்கு...

வரமிளகாய் - 2
மல்லி - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 4

செய்முறை:

முதலில் நறுக்கி வைத்துள்ள சேனைக்கிழங்கை நன்கு கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, கிழங்கு நன்கு வெந்ததும் அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை, பொன்னிறமாக வறுத்து குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் வேக வைத்துள்ள சேனைக்கிழங்கை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் பொடி செய்துள்ளதை சேர்த்து, மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா சேர்த்து பிரட்டி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, ஊற வைத்துள்ள சேனைக்கிழங்கு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு மொறுமொறுவென்று வரும் வரை நன்கு கிளறி இறக்கினால், சேனைக்கிழங்கு வறுவல் ரெடி!!!