பாசிப்பருப்பு பாயாசம்

பாசிப்பருப்பு பாயாசம்

பாசிப்பருப்பைக் கொண்டு பாயாசம் செய்யுங்கள். இந்த பாயாசம் செய்ய சற்று நேரமானாலும், வீட்டிற்கு வருபவர்களுக்கு இந்த பாயாசத்தை செய்து கொடுத்தால், நல்ல பெயரைப் பெறலாம். குறிப்பாக இது ஒரு பிராமின் ஸ்டைல் பாயாசம். சரி, இப்போது அந்த பாசிப்பருப்பு பாயாசத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
பால் - 2 1/4 கப்
பாசிப்பருப்பு - 1/3 கப்
கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
வெல்லம் - 3/4 கப்
துருவிய தேங்காய் - 1/4 கப்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
முந்திரி - 6
நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் வெல்லத்தை குறைவான தண்ணீரில் போட்டு கரைய வைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதே வாணலியில் பாசிப்பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து லேசாக வறுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு உடனே தண்ணீர் ஊற்றி, பின் தண்ணீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு துருவிய தேங்காய் மற்றும் அரிசி மாவை மிக்ஸியில் போட்டு லேசாக அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பருப்புக்களை சேர்த்து, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி, அதன் மேல் ஒரு கிண்ணத்தில் தேங்காய் மற்றும் அரிசி மாவை போட்டு, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கி, பருப்பை மத்து கொண்டு நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் மசித்து வைத்துள்ள பருப்பு, அரிசி மாவு கலவை, ஏலக்காய் பொடி மற்றும் வெல்லத் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அடுத்து அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தீயை குறைவில் வைத்து அனைத்து பொருட்களும் ஒன்று சேர நன்கு கிளறி விட்டு இறக்கி, நன்கு குளிர விட வேண்டும். பின்னர் கடாயில் பாலை ஊற்றி, பால் நன்கு சுண்டும் வரை கொதிக்க விட்டு, பாலானது நன்கு சுண்டியதும், அதில் குளிர்ந்த வெல்லக் கலவையை சேர்த்து, பின் முந்திரியை சேர்த்து, 2-3 நிமிடம் கிளறி இறக்கினால், சுவையான பாசிப்பருப்பு பாயாசம் ரெடி!!!