அகத்திக்கீரை கூட்டு

வயிற்றுப் புழுக்களை நீக்கும் அகத்திக்கீரை கூட்டு

அகத்திரிக்கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள நஞ்சுகள் அனைத்தும் வெளியேறி, உடல் சுத்தமாகும். மேலும் வயிற்றில் பூச்சி இருந்தாலோ அல்லது புண் இருந்தாலோ உடனே போய்விடும். அத்தகைய மருத்துவ குணங்களைக் கொண்ட அகத்திக்கீரையை கூட்டு செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். சரி, இப்போது அந்த அகத்திக்கீரை கூட்டு எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

அகத்திக்கீரை - 1 கட்டு
பாசிப்பருப்பு - 50 கிராம்
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 3
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் பாசிப்பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் கீரையை போட்டு நன்கு கிளறி, பின் ஊற வைத்துள்ள பாசிப்பருப்பை கழுவிப் போட்டு நன்கு பிரட்டி விட வேண்டும். பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் தெளித்து, மூடி வைத்து வேக வைக்க வேண்டும். கீரையானது நன்கு வெந்த பின், அதில் உப்பு மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், அகத்திக்கீரை கூட்டு ரெடி!!