பச்சரிசி பால் பொங்கல்

பச்சரிசி பால் பொங்கல்

பொங்கல் திருநாளன்று சர்க்கரை பொங்கல் மட்டும் தான் செய்ய வேண்டும் என்பதில்லை. சர்க்கரை பொங்கலடன், கார பொங்கலும் செய்யலாம். அதிலும் பச்சரிசி கொண்டு பால் பொங்கல் செய்து, பொங்கல் புளிக்குழம்புடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். உங்களுக்கு பால் பொங்கல் எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். சரி, இப்போது பச்சரிசி பால் பொங்கலை எப்படி எளிய செய்முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து பொங்கலன்று செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
பாசிப் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - சிறிது (நெய்யில் வறுத்தது)
பால் - 2 கப்
தண்ணீர் - 2 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
முதலில் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரிசியை நீரில் நன்கு கழுவி, பெரிய குக்கரில் போட்டு, அத்துடன் பாசிப்பருப்பையும் சேர்த்து, 1 கப் பால் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி, அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
விசில் போனதும், குக்கரை திறந்து, மீதமுள்ள பாலை ஊற்றி கரண்டியால் மசித்து விட வேண்டும். பின் மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, 3 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, பின் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும். பிறகு அதில் தேங்காய், வறுத்த முந்திரி சேர்த்து கிளறி இறக்கினால், பச்சரிசி பால் பொங்கல் ரெடி!!! இந்த பொங்கலை பொங்கல் புளிக் குழம்புடன் சாப்பிட்டால், அற்புதமாக இருக்கும்.