ராஜ் கச்சோரி

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ராஜ் கச்சோரி

தற்போது வட இந்திய ஸ்நாக்ஸ்கள் தென்னிந்தியாவின் தெருவோரங்களில் அதிகம் விற்கப்படுகிறது. மேலும் அதனை மக்களும் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். குறிப்பாக கச்சோரியை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
எனவே கச்சோரியில் ஒன்றான ராஜ் கச்சோரியை வீட்டில் இருக்கும் பொருட்களைப் கொண்டே ஈஸியாக செய்து சாப்பிடலாம். இங்கு ராஜ் கச்சோரியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

மைதா - 1 கப்
ரவை பொடி - 1/4 கப்
சோள மாவு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
உள்ளே வைப்பதற்கு...
உருளைக்கிழங்கு - 1-2 (வேக வைத்து மசித்துக் கொள்ளவும்)
ப்ரௌன் சுண்டல் - 1/2 கப்
பச்சை பயறு - 1/2 கப்
தயிர் - 1 கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
புதினா சட்னி - தேவையான அளவு
தக்காளி சாஸ் - தேவையான அளவு
ஓமப்பொடி - தேவையான அளவு
சாட் மசாலா - தேவையான அளவு
மிளகாய் தூள் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

செய்முறை:

முதலில் கருப்பு சுண்டல் மற்றும் பச்சை பயிறை நீரில் 6-7 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை கழுவி, தனித்தனியாக குக்கரில் போட்டு 3 விசில் விட்டு வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு தயிரில் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பௌலில் ரவை பொடி, மைதா, சோள மாவு, உப்பு, எண்ணெய் சேர்த்து, தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து மென்மையாக பூரி மாவு பதத்திற்கு பிசைந்து 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மணிநேரம் கழித்து, மாவை வேண்டிய அளவில் உருண்டைகளாக பிடித்து, வட்டமாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.

அதே சமயம் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ளதை எண்ணெயில் போட்டு பூரிகளாக சுட்டுக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு பூரியை எடுத்து, அதன் நடுவே உடைத்து, அதனுள் மசித்த உருளைக்கிழங்கு சிறிது வைத்து, அத்துடன் வேக வைத்த சுண்டல் மற்றும் பச்சை பயறு வைத்து, அதன் மேல் புதினா சட்னி மற்றும் தக்காளி சாஸ் சிறிது ஊற்றிக் கொள்ளவும்.
பின்பு அதில் தயிர் சிறிது ஊற்றி, அதன் மேல் மீண்டும் புதினா சட்னி மற்றும் தக்காளி சாஸ் ஊற்றி, மேலே ஓமப்பொடியைத் தூவி, அத்துடன் சிறிது மிளகாய் தூள் மற்றும் சாட் மசாலா, கொத்தமல்லி சிறிது தூவி பரிமாறினால், ராஜ் கச்சோரி ரெடி!!! இதேப்போல் அனைத்து பூரியையும் செய்துக் கொள்ள வேண்டும்.