காளான் பஜ்ஜி

காளான் பஜ்ஜி
காளானை பலவாறு சமைத்து சாப்பிடலாம். எப்படி சமைத்து சாப்பிட்டாலும், இதன் சுவை அருமையாக இருக்கும். அதில் ஒன்று தான் மாலை வேளையில் காபி அல்லது டீ குடிக்கும் போது செய்து சாப்பிடுவதற்கு ஏற்றவாறு பஜ்ஜி செய்து சாப்பிடலாம். காளான் பஜ்ஜி செய்வதென்பது மிகவும் ஈஸி. இங்கு அந்த காளான் பஜ்ஜியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
பட்டன் காளான் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது) மைதா - 100 கிராம்
அரிசி மாவு - 100 கிராம்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். பின்னர் அந்த நீரில் காளானை போட்டு 2 நிமிடம் ஊற வைத்து அலசி, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். காளானில் உள்ள நீர் முற்றிலும் வற்றிய பின், ஒரு பௌலில் மைதா, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், காளானை கலந்து வைத்துள்ள மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து காளானையும் பொரித்து எடுத்தால், காளான் பஜ்ஜி ரெடி!!!