தக்காளி - பனீர் பிரியாணி

தக்காளி - பனீர் பிரியாணி

தேவையானவை: பாசுமதி அரிசி - 2 கப், பெரிய வெங்காயம் - 2, நாட்டுத் தக்காளி - 3, பனீர் துண்டுகள் - 150 கிராம், பச்சை மிளகாய் - 6 (அல்லது காரத்துக்கேற்ப), இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பட்டை - சிறு துண்டு, லவங்கம், ஏலக்காய் - தலா 2, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், நெய் - தலா ஒன்றரை டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பெரிய வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். பனீர் துண்டுகளை சதுர சதுரமாக நறுக்கிக்கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி - பூண்டு விழுது, நறுக்கிய பனீர் துண்டுகள் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், கீறிய பச்சை மிளகாய், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து மூன்றரை கப் நீர் சேர்க்கவும். நன்றாக கொதித்ததும் கழுவிய பாசுமதி அரிசியை சேர்த்து மூடி, ஆவி வந்ததும் வெயிட் போட்டு `சிம்’மில் வைத்து 10 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். பின்னர் திறந்து கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்