மாங்கா வத்தக் குழம்பு

மாங்கா வத்தக் குழம்பு


கோடையில் மாங்காய் அதிகம் கிடைக்கும். அத்தகைய மாங்காயை துண்டுகளாக்கி உப்பு போட்டு பிரட்டி, வெயிலில் நன்கு உலர்த்தி வத்தல் போன்று செய்து, அதனைக் கொண்டு குழம்பு செய்து சாப்பிட்டால் மிகவும் அற்புதமாக இருக்கும். இங்கு மாங்கா வத்தல் குழம்பை எப்படி எளிமையான செய்முறையில் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்து முயற்சித்துப் பார்த்து, எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 1 (நறுக்கியது)
பூண்டு - 6 பற்கள்
கத்திரிக்காய் - 1 (நறுக்கியது)
மாங்கா வத்தல் - 10 துண்டுகள்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1 டீஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 3 கப்

தாளிப்பதற்கு...

நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பின்னர் அதில் வெங்காயம், பூண்டு சேர்த்து 2 நிமிட வதக்கவும். பிறகு அத்துடன் கத்திரிக்காய், மாங்கா வத்தல் சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு மசாலாப் பொடிகள், உப்பு சேர்த்து 1 நிமிடம் பிரட்டி, தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து மூடி வைத்து 15-20 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். அடுத்து அரிசி மாவை நீரில் கலந்து குழம்பில் ஊற்றி கிளறி 5 நிமிடம் பச்சை வாசனைப் போக கொதிக்க வைத்து இறக்கினால், மா வத்தல் குழம்பு ரெடி!!!