பீட்ரூட் புலாவ்

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பீட்ரூட் புலாவ்

குழந்தைகளுக்கு பீட்ரூட் கொடுப்பது மிகவும் நல்லது. ஆனால் உங்கள் குழந்தை பீட்ரூட் சாப்பிட மறுத்தால், அவர்களுக்கு பீட்ரூட் புலாவ் செய்து கொடுங்கள். அதிலும் பள்ளி செல்லும் போது செய்து டிபன் பாக்ஸில் போட்டு கொடுத்தால், மதியம் குழந்தைகள் பசியுடன் அனைத்தையும் காலி செய்துவிடுவார்கள்.
தமிழ்நாட்டு பாரம்பரிய தின்பண்டங்களை சுவைக்க ஆசையா? அப்ப உடனே இத படிங்க...

மேலும் பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம். சரி, இப்போது அந்த பீட்ரூட் புலாவ் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி - 1 கப்
பீட்ரூட் - 3/4 கப் (பொடியாக நறுக்கியது)
பச்சை பட்டாணி - 1/4 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
தண்ணீர் - 1 1/2 கப்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டீஸ்பூன்
நெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
பட்டை - 1/2 இன்ச்
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
அரைப்பதற்கு...
சின்ன வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 1

செய்முறை:

முதலில் மிக்ஸியில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். அரிசியை கழுவி, நீரில் 30 நிமிடம் ஊற வைத்து, நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் வெங்காய பேஸ்ட் சேர்த்து தீயை குறைத்து பச்சை வாசனை போக 3 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்கி, கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் பீட்ரூட் மற்றும் பட்டாணி சேர்த்து குறைவான தீயிலேயே 2 நிமிடம் கிளறி, தேவையான அளவு உப்பு தூவி பிரட்டி வேக வைக்க வேண்டும்.
அடுத்து அதில் அரிசியைப் போட்டு நன்கு பிரட்டி, பின் தண்ணீரை ஊற்றி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், பீட்ரூட் புலாவ் ரெடி!!!