மொறுமொறுப்பான... ரவை வடை

மொறுமொறுப்பான... ரவை வடை

மாலை வேளை வந்தாலே அனைவருக்கும் ஒரே குஷி தான். அதிலும் குழந்தைகளுக்கு என்றால் சொல்லவே வேண்டாம். ஏனெனில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகள், மாலையில் அம்மா வீட்டில் ஸ்நாக்ஸ் கொடுப்பார்கள் என்று ஆவலோடு இருப்பார்கள். அப்போது அவர்களுக்கு சற்று வித்தியாசமாக செய்து கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் அல்லவா! அப்படியெனில் அதற்கு ரவை வடை சரியானதாக இருக்கும். அந்த ரவை வடையை எப்படி செய்வதென்று, அதன் செய்முறையை கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து, வீட்டில் செய்து குழந்தைகளை அசத்துங்கள்.

தேவையான பொருட்கள்:

ரவை - 1/2 கிலோ
வெங்கயாம் - 3-4 (பொடியாக நறுக்கியது)
தயிர் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
பேக்கிங் சோடா - 1/2 சிட்டிகை
தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
கொத்தமல்லி - சிறிது
நெய் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், ரவையை போட்டு, லேசான பொன்னிறத்தில் வறுத்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் வறுத்த ரவை, தயிர், வெங்காயம், பச்சை மிளகாய், பேக்கிங் சோடா, துருவிய தேங்காய், கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து, வடை பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள கலவையை வடையாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான ரவை வடை ரெடி!!!