பரங்கிக்காய் அல்வா

நாவூறும்... பரங்கிக்காய் அல்வா
இதுவரை காய்கறிகளைக் கொண்டு செய்யும் அல்வாக்களில் கேரட் அல்வாவைத் தான் வீட்டில் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் இனிப்பு பூசணிக்காய் என்னும் பரங்கிக்காய் கொண்டு அல்வா செய்து சுவைத்ததுண்டா? இல்லையெனில், தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு பரங்கிக்காய் அல்வாவை எப்படி சிம்பிளாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித் செய்து சுவைத்து, எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பரங்கிக்காய் - 2 கப் (துருவியது)
பால் - 1 கப் சர்க்கரை - 1 கப்
நெய் - 1 கப்
உலர் திராட்சை - 8-10
ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்
முந்திரி - 5-6
பாதாம் - 5-6
குங்குமப்பூ - சிறிது
செய்முறை:
முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் துருவிய பரங்கிக்காய் சேர்த்து மூடி வைத்து, 2 விசில் விட்டுக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரை திறந்து, பரங்கிக்காயை ஒரு பௌலில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், வேக வைத்த பரங்கிக்காயை சேர்த்து நன்கு வதக்கி, 5 நிமிடம் கழித்து அதில் 1 கப் பால் சேர்த்து கிளறி விட வேண்டும். பின் அதில் 1 கப் சர்க்கரை சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும். அடுத்து அதில் குங்குமப்பூ சேர்த்து, 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, தீயை குறைத்து கலவை நன்கு கெட்டியாகி அல்வா போன்று வரும் வரை கிளறி விட வேண்டும். பிறகு அதில் ஏலக்காய் பொடி சேர்த்து பிரட்டி இறக்கி குளிர வைக்க வேண்டும். அதற்குள் மற்றொரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், உலர் திராட்சை, முந்திரி, பாதாம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அல்வாவின் மீது தூவினால், பரங்கிக்காய் அல்வா ரெடி!!!