சீரகக் குழம்பு

சீரகக் குழம்பு

தேவையானவை:

சீரகம் - 2 டேபிள்ஸ்பூன்
புளித்தண்ணீர்- ஒரு எலுமிச்சை சைஸ் புளியின் சாறு
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 5 அல்லது 6 பல்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள்த்தூள் - கால் டீஸ்பூன்
வெல்லம் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
வெந்தயம் - கால் டீஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை

செய்முறை:

அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் அதில் எண்ணெய் விடாமல் சீரகத்தை வாசனை வரும் வரை வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள். புளியை ஒரு கப் நீரில் பத்து நிமிடம் ஊறவைத்து, அதன் ஜூஸை எடுத்துக் கொள்ளுங்கள். வெங்காயத்தை மெல்லிய ஸ்லைஸ்களாக நறுக்கி, பூண்டுப்பல்லைத் தோல் உரித்தும் வைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு சேர்த்து பொரிய விடுங்கள். இதில் வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை பெருங்காயம் சேர்த்து வதக்குங்கள்.
நறுக்கிய வெங்காயம், தோல் உரித்த பூண்டுப்பல்லைச் சேர்த்து மூன்று நிமிடம் வதக்குங்கள். சாம்பார் பொடி மற்றும் மஞ்சள்த்தூளைச் சேர்த்து மீண்டும் வதக்கி, புளித்தண்ணீரை ஊற்றி கொதிக்க விடுங்கள். பச்சை வாசனை போனதும் அரைத்த சீரகப்பொடி, தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். நன்கு கொதித்ததும் அடுப்பை மிதமாக்கி வெல்லத்தைச் சேர்த்து ஐந்து முதல் எட்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கிப் பரிமாறுங்கள்.

ஒவ்வொரு முறையும் சீரகத்தை வறுத்து அரைத்து உபயோகப்படுத்தி, இந்தக் குழம்பை வைத்தால் 2 முதல் 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.