புழுங்கலரிசி பிரியாணி

புழுங்கலரிசி பிரியாணி

தேவையானவை:

புழுங்கலரிசி - 2 கப், பெரிய வெங்காயம் - 3, தக்காளி - 4, மிளகாய்தூள் - 1 டீஸ்பூன், தயிர் - அரை கப், தேங்காய்ப்பால் - அரை கப், கேரட் - 1, பீன்ஸ் - 8, உருளைக்கிழங்கு (விருப்பப் பட்டால்) - 1, புதினா, மல்லித்தழை - தலா ஒரு கைப்பிடி, உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

பிரிஞ்சி இலை - 2, நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன்.

அரைக்க:

பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2 (தனியாக அரைக்க வேண்டும்), இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 6 பல் (தனியாக அரைக்க வேண்டும்), பச்சை மிளகாய் - 3, தனியா - ஒரு டேபிள்ஸ்பூன் (தனியாக அரைக்க வேண்டும்).

செய்முறை:

புழுங்கலரிசியை நன்கு கழுவி ஊறவையுங்கள். காய்கறிகளை சிறு துண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயம், தக்காளியை மெல்லியதாக, நீளவாக்கில் நறுக்குங்கள். குக்கரில் எண்ணெய், நெய்யைக் காயவைத்து பிரிஞ்சி இலை போட்டுத் தாளித்து, வெங்காயம், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும், நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை அதனுடன் சேர்த்துக் கிளறுங்கள். பிறகு, அரைத்து வைத்திருக்கும் பட்டை, லவங்க விழுதைச் சேர்த்து வதக்குங்கள். ஐந்து நிமிடம் வதக்கிய பிறகு, பச்சை மிளகாய், தனியா விழுதைச் சேர்த்து, ஐந்து நிமிடம் கிளறிய பின், இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்குங்கள்.
அனைத்தும் சேர்ந்து பச்சை வாசனை போக வதங்கிய பிறகு, புதினா, மல்லித்தழை, மிளகாய்தூள் சேர்த்து நன்கு வதக்கி தயிரைச் சேருங்கள். அத்துடன், ஐந்தரை கப் தண்ணீரைக் கொதிக்கவைத்து ஊற்றி, மீண்டும் கொதிக்கவிடுங்கள். நன்கு கொதித்தபின், அரிசியை சேர்த்து, தேவையான உப்பும் போட்டு, மூடி வையுங்கள். 2 விசில் வந்ததும் அடுப்பை ‘ஸிம்’மில் வைத்து, 10 நிமிடம் கழித்து இறக்குங்கள்.