உருளைக்கிழங்கு பனீர் குருமா

உருளைக்கிழங்கு பனீர் குருமா

தேவையானவை:

பனீர் - 400 கிராம் (மீடியம் சைஸ் துண்டுகளாக்கவும்)
உருளைக்கிழங்கு - ஒரு கிலோ (மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கவும்)
வெங்காயம் - அரை கிலோ (பொடியாக நறுக்கவும்)
தக்காளி - கால் கிலோ (பொடியாக நறுக்கவும்)
முழுத் தேங்காய் - 1 (துருவி அரைத்து, 2 முறை பால் எடுக்கவும்)
முந்திரி - ஒரு கைபிடி (கரகரப்பாகப் பொடித்து முதல் தேங்காய்ப்பாலில் சேர்க்கவும்)
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
கரம்மசாலாத் தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

தாளிக்க:

சோம்பு - அரை டீஸ்பூன்
பிரிஞ்சி இலை - ஒன்று
எண்ணெய் - கால் கப்
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

அரைப்பதற்கு தேவையான மசாலாப் பொருட்கள்:

கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 8 பல்
பச்சை மிளகாய் - 6
நறுக்கிய வெங்காயம் - ஒரு கைப்பிடி
பட்டை - 2 துண்டு
சோம்பு, மிளகு - தலா அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை- ஒரு கைப்பிடி

அரைக்க வேண்டியதை எல்லாம் மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து வைக்கவும்.

தேங்காய் பால் எடுக்க:
தேங்காயைத் துருவி தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து, பின் ஒரு மெல்லியத் துணியில் பிழிந்து பால் எடுக்கவும். இதுதான் திக்கான முதல் பால். மீண்டும் ஒரு முறை தண்ணீர் விட்டு அரைத்துப் பிழிந்தெடுத்தால், இரண்டாம் பால் தயார்.

செய்முறை:

அடுப்பில் ஒரு கனமான எண்ணெய் சட்டியை வைத்து எண்ணெய், வெண்ணெய் சேர்த்துச் சூடானதும் பிரிஞ்சி இலை, சோம்பு சேர்த்துத் தாளிக்கவும். இதில் வெங்காயத்தைச் சேர்த்து லேசாக வதங்க ஆரம்பிக்கும்போது, அரைத்த விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு நறுக்கிய உருளைக்கிழங்குத் துண்டுகளைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, இரண்டாம் தேங்காய்ப்பால், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வேக விடவும். உருளைக்கிழங்கு முக்கால்பாகம் வெந்ததும், தக்காளியைச் சேர்த்து வேக விடவும். தக்காளி வெந்ததும் பனீர், கரம் மசாலாத்தூள் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடவும். இறுதியாக முந்திரி சேர்த்த முதல் தேங்காய்ப்பாலை விட்டு ஒரு கொதி வந்ததும், இறக்கிப் பரிமாறவும்.

குறிப்பு
பனீர் மொறுமொறுப்பாக இருக்க வேண்டுமானால், எண்ணெயில் பொரித்துச் சேர்க்கவும். மிருதுவாக வேண்டுமானால் அப்படியே சேர்க்கவும்.