ஹரியாலி சமோசா

ஹரியாலி சமோசா

மாலை வேளையில் ஸ்நாக்ஸாக சாப்பிட பல ரெசிபிக்கள் உள்ளன. அதில் ஒன்று தான் சமோசா. சமோசாவை ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்றும் சொல்லலாம். ஏனெனில் இதனை காய்கறிகள் கொண்டு செய்வதால் தான். மேலும் சமோசாவானது சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ் ஆகும். அந்த வகையில் இப்போது ஹரியாலி சமோசாவின் செய்முறையை கீழே கொடுத்துள்ளோம். அதனை டீ அல்லது காபி குடிக்கும் போது செய்மு சாப்பிட்டு, மாலை வேளையை சந்தோஷமாக கொண்டாடுங்கள்.

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 1 கப்
பச்சை பட்டாணி - 1/2 கப் (வேக வைத்து மசித்தது) பீன்ஸ் - 1/2 கப் (பொடியாக நறுக்கி, வேக வைத்தது) அவல் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
ஓமம் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவை போட்டு, அதில் வெதுவெதுப்பான நீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஓமம் சேர்த்து தாளித்து, பச்சை பட்டாணி மற்றும் பீன்ஸ் சேர்த்து, 2-3 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து அதில் எலுமிச்சை சாறு, சர்க்கரை மற்றும் அவல் சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும். பின் ஒரு பௌலில் சிறிது மைதா மாவை போட்டு, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் போல் கலந்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு பிசைந்து வைத்துள்ள மைதா மாவை சிறு உருண்டைகளாக பிரித்து, அதனை சிறு சப்பாத்திகளாக தேய்த்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒவ்வொன்றையும் கூம்பு வடிவத்தில் செய்து, அதனுள் பச்சை பட்டாணி கலவையை வைத்து, முனையை மைதா பேஸ்ட் உதவியால் மூடிக் கொள்ள வேண்டும். இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சமோசாக்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான ஹரியாலி சமோசா ரெடி!!! இதனை சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.