தவலை வடை

தவலை வடை

தேவையானவை:

பச்சரிசி - அரை கப், கடலைப்பருப்பு - அரை கப், பாசிப்பருப்பு - அரை கப், துவரம்பருப்பு - அரை கப், உளுத்தம்பருப்பு - அரை கப், ஜவ்வரிசி - ஒரு கைப்பிடி, தேங்காய் பல் பல்லாகக் கீறியது - கால் கப், காய்ந்த மிளகாய் - 6, துருவிய இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 1 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை - ஒரு கைப்பிடி, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயம் - 1 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உப்பு - ருசிக்கு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை:

அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு ஆகிய மூன்றையும் ஒன்றாக ஊறவையுங்கள். உளுத்தம்பருப்பையும் பாசிப்பருப்பையும் தனியாக ஊறவையுங்கள். ஜவ்வரிசியை தனியே ஊறவையுங்கள். ஒரு மணி நேரம் ஊறியபிறகு, அரிசியுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து சற்று கரகரப்பாக அரையுங்கள். பிறகு, ஊறிய பருப்புகளை சேர்த்து, கரகரப்பாக அரைத்தெடுங்கள். அரைத்த மாவில் பெருங்காயம், தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேவையான உப்பு சேர்த்து இட்லி மாவை விட சற்றுக் கெட்டியாக வைத்துக்கொள்ளுங்கள். கடுகைப் பொரித்து அதில் சேருங்கள். எண்ணெயைக் காயவைத்து, மாவை ஒரு குழிவான கரண்டியில் எடுத்து எண்ணெயில் ஊற்றுங்கள். சிறு தீயில் நன்கு வேகவிட்டு எடுங்கள். மாலை நேரத்துக்கு ஏற்ற மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் இது.